எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியோடுதான் கூட்டணி: விஜயகாந்த்
First Published : 26 Mar 2011 03:22:57 AM IST
Last Updated :
பல்லாவரம் அ.தி.மு.க. வேட்பாளர் ப.தன்சிங்கை ஆதரித்து பிரசாரம் செய்கிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
சென்னை, மார்ச் 25: எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியோடுதான் கூட்டணி அமைத்துள்ளேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.
தாம்பரம், பல்லாவரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் டி.கே.எம். சின்னையா, பி.தன்சிங், ஆலந்தூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:
மக்களோடுதான் கூட்டணி என்று சொன்ன விஜயகாந்த் இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து இருக்கிறாரே என்று சிலர் கேட்கிறார்கள். நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல செய்த எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியோடுதான் கூட்டணி அமைத்துள்ளேன்.
அதற்காக நான் மற்றவர்களைப் போல ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்கப்போவது இல்லை. பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்த கருணாநிதி, இந்த முறை என்னை எப்படியாவது தனித்து நிற்க வைத்து மறுபடியும் தமிழகத்தை சுரண்ட திட்டமிட்டார். அவரது திட்டத்தை பொடிப்பொடியாக்க நான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளேன்.
கருணாநிதியின் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும். மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று கூறி, அவருடைய மக்களுக்கு சொத்துகளை குவித்து வருகிறார். இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார், மறந்தும் கூட தி.மு.க.வுக்கு யாரும் ஓட்டு போட்டுவிடாதீர்கள்.
தி.மு.க.வுக்கு ஜால்ரா அடித்தும், மிரட்டியும் காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளது. அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடக்கும்போது அங்குள்ள மேல் மாடியில் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. தமிழகத்தை சூழ்ந்துள்ள இருளை விலக்கும் நாள் ஏப்ரல் 13.
திருவாரூர் கூட்டத்தில் பேசியவர்கள் இது கொள்கைக் கூட்டணி என்று பேசினர். ஆனால் அது கொள்கைக் கூட்டணி அல்ல. தி.மு.க ஆட்சிக்கு ஜீரோ மார்க் போட்ட ராமதாஸ், இப்போது கருணாநிதியை ஹீரோ என்கிறார்.
தமிழக மக்களின் நலனுக்காக கருணாநிதி என்றுமே தில்லி சென்றது இல்லை. தமது குடும்பத்துக்கு பதவி வாங்க வேண்டும் என்றால் தில்லி செல்கிறார். கச்சத்தீவை தாரை வார்த்தவர் இப்போது அதை மீட்க புது ஒப்பந்தம் போடுவோம் என்கிறார். அப்படி என்றால் பழைய ஒப்பந்தம் என்ன ஆயிற்று?
நானும்தான் டி.வி. நடத்துகிறேன். ஆனால் ஒரு புதுப் படம் கூட வாங்க முடியவில்லை. ஆனால் அவர்கள் 200 படத்துக்கும் மேல் தங்கள் கைவசம் வைத்துள்ளனர்.
மதுரையில் பிறந்த நான், ரிஷிவந்தியத்தில் போட்டியிடுகிறேன். அழகிரி மதுரைக்கு வெளியே வந்து போட்டியிடத் தயாரா?
கருணாநிதி ஆட்சியில் இருக்கும் வரை ஏழைகள் இருக்கத்தான் செய்வார்கள். எல்லா விலைவாசிகளும் உயரத்தான் செய்யும் என்றார் விஜயகாந்த்
No comments:
Post a Comment